பதிவு செய்த நாள்
15
பிப்
2026
11:02
திருப்போரூர்: திருப்போரூர் கைலாசநாதர் கோவிலில், சனி பிரதோஷ வழிபாடு மற்றும் சிவராத்திரி விழா ஏற்பாடுகள், நேற்று நடந்தன.
திருப்போரூர் பிரணவ மலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்து உள்ளது.
இங்கு, நேற்று சனி பிரதோஷத்தையொட்டி, மாலை 6:00 மணியளவில் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர், கோவிலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தார்.
இன்று நடைபெறும் சிவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் அலங்கார பந்தல், பக்தர்கள் வரிசையாக செல்லும் வகையில் மரக்கட்டையால் தடுப்பு அமைத்தல், வண்ண மின் விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்தன.
அதேபோல், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய செங்கண்மால் கிராமத்தில் உள்ள செங்கண்மாலீஸ்வரர் கோவில், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவில், மாம்பாக்கத்தில் உள்ள தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு மற்றும் சிவராத்திரி முன்னேற்பாடு பணிகளும் நடந்தன.