மஹாதேஸ்வரா மலையில் கடும் பாதுகாப்பு சந்தேக நபர்களை மாறுவேடத்தில் கண்காணிக்கும் போலீசார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2026 12:02
பெங்களூரு: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மலை மஹாதேஸ்வரா மலையில் இன்று திருவிழா நடைபெறவுள்ளது. அதற்காக கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவின் போது, எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்கவும், பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், போலீசார் மாறு வேடத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்காணிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில் உள்ள மலை மஹாதேஸ்வரா மலையில், ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடக்கும். இதில், கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வந்து பங்கேற்பர்.
கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி, சமூக விரோதிகள் பக்தர்களை போன்று நடித்து, அவர்களின் தங்க நகைகள், பணத்தை திருடும் சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. இம்முறை அப்படிப்பட்டவர்களை ஒடுக்க, போலீஸ் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. உள்ளூர் போலீசாருடன், அண்டை மாநில போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மாறு வேடத்தில், சந்தேகத்துக்கு இடமான நபர்களை கண்காணிப்பர்.
இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
வழக்கம் போன்று இம்முறையும், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மஹாதேஸ்வரா மலைக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். அவர்களின் பாதுகாப்புக்கு அனைத்து ஏற் பாடுகளும் செய்துள்ளோம். எந்த விதமான அசம்பாவிதங்களும் நடக்காமல், போலீசார் மாறு வேடத்தில் கண்காணிப்பர்.
பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்பதால், அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போலீசாரும் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். மைசூரு, மாண்டியா உட்பட பல்வேறு மாவட்டங்களின் போலீசாரும், சாம்ராஜ்நகருக்கு வந்துள்ளனர். யாராவது பக்தர்களுக்கு தொந்தரவு கொடுக்க முயற்சித்தால், அவர்களின் உடைமைகளை திருட முற்பட்டால் அல்லது பெண்களிடம் சில்மிஷம் செய்தால், போலீசாரிடம் சிக்குவது உறுதி. ஏன் என்றால் போலீசாரும், மஹாதேஸ்வராவின் பக்தர்களை போன்று, நெற்றியில் விபூதி பட்டை பூசியபடி, பக்தர்களுடன் கலந்திருப்பர்.
அண்டை மாநிலங்களின் போலீசாருடன், மாறுவேடத்தில் பாதுகாப்பில் ஈடுபடுவது இதுவே முதன் முறையாகும். பக்தர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமானவர்களை கண்டால், அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். இம்முறை மஹாதேஸ்வரா மலையில், சிவராத்திரி விழா நல்ல முறையில் நடந்து முடிய, அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளோம்.