பதிவு செய்த நாள்
15
பிப்
2026
12:02
லட்சக்கணக்கான ரூபாய் செலவில், தங்களின் கனவு வீட்டை கட்டுவோரை பார்த்துள்ளோம் ஆனால், சன்ன மல்லப்பா என்பவர், தன் சொந்த பணத்தில் லட்சத்து ஒன்று சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்துள்ளார். அவற்றுக்கு தினமும் அபிஷேகம் மற்றும் பூஜைகளும் செய்கிறார்.
தாவணகெரே நகரின் ஷாகலே கிராமத்தில் வசிப்பவர் சன்ன மல்லப்பா. ஒரு நாள் இரவு, இவரது கனவில் லிங்கம் தோன்றியது. இதுகுறித்து ஒரு சாமியிடம் கூறி, காரணம் கேட்டார்.
அவரும் சிவன் கோவில் கட்டி, அங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்யும்படி ஆலோசனை தெரிவித்தார். அதன்படி, சன்ன மல்லப்பா, தன் கிராமத்தில் கோவில் கட்டி, 20 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்தார்.
அந்த இடமே புண்ணிய தலமாக மாறியுள்ளது. கோவிலில் தற்போது லட்சத்து ஒன்று சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கோவிலை சுற்றிலும் வயல்கள், தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே கோவிலை, ‘மஹேஸ்வரன் தோட்டம்’ என்றே, அழைக்கின்றனர். தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்; சிவனை தரிசிக்கின்றனர். ஆண்டு தோறும் இங்கு திருவிழாவும் கோலாகலமாக நடக்கிறது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
சன்ன மல்லப்பா தினமும் லிங்கங்களுக்கு பூஜை, அபிஷேகம் செய்கிறார். இன்று சிவராத்திரி என்பதால், பெருமளவில் பக்தர்கள் திரண்டு வருவர்.
இதுகுறித்து, சன்னமல்லப்பா கூறியதாவது:
கிராமத்தில் எனக்கு சொந்தமான தோட்டத்தில், சிவன் கோவில் கட்டி, லிங்கங்கள் பிரதிஷ்டை செய்துள்ளேன். 20 லிங்கங்களின் பீடங்கள் உள்ளன. ஒவ்வொரு பீடத்திலும், 5,000 லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்காக, 22 லட்சம் ரூபாய் செலவிட்டேன். ஆந்திராவின் கர்னுால் மற்றும் நந்தியாலா இடையே உள்ள ஆலதகட்டா என்ற இடத்தில் லிங்கங்கள் செதுக்கப்பட்டன.
அங்கிருந்து வாகனத்தில் தாவணகெரேவுக்கு கொண்டு வரப்பட்டன. 5,000 ரூபாய் வாகன வாடகை வழங்கப்பட்டது. எங்கள் குடும்பத்தில் கஷ்டம் வந்தது. இதே நேரத்தில் என் கனவில் லிங்கம் தோன்றியது. இதுகுறித்து ஆலோசனை கேட்டு, லிங்கங்களை பிரதிஷ்டை செய்தேன். இப்போது எங்களுக்கு நல்லதே நடக்கிறது.
என் கனவில் எங்கு பார்த்தாலும், லிங்கங்களாகவே தென்பட்டன. அதன்படி லட்சத்து ஒரு லிங்கங்களை பிரதிஷ்டை செய்தேன். தினமும் பக்தர்கள் வந்து சிவனை தரிசனம் செய்கின்றனர். சிவராத்திரி நாளன்று தியானம் இருக்கும். தினமும் நாங்கள் பூஜை செய்கிறோம். ஒரு நாளும் தவறியது இல்லை.
சன்ன மல்லப்பாவின் மகன் கவுடா கூறியதாவது:
பொதுவாக பெற்றோர், தங்களின் பிள்ளைகளுக்காக வீடு கட்டுவர். எங்கள் தந்தை கோவில் கட்டி, லிங்கங்களை பிரதிஷ்டை செய்துள்ளார். இது, எங்கள் தந்தையின் ஆசை.
அவரது கனவில் தினமும் லிங்கங்கள் தோன்றின. இரவில் உறங்காமல் தவித்தார். பலரின் ஆலோசனைப்படி கடந்த மூன்று ஆண்டுக்கு முன், சிவன் கோவில் கட்டி, லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த கோவிலுக்கு வந்து, பிரார்த்தனை செய்தால், குழந்தை வரம் கிடைக்கும். இங்குள்ள கிணற்று நீரை அருந்தினால், சரும நோய் குணமாகும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.
சுற்றுப்பகுதி மக்கள் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். சிவராத்திரியை முன்னிட்டு, தியானம், சிறப்பு பூஜைகள் நடக்கும்.
சுற்றிலும் தோட்டங்கள் உள்ளன. இதனால் மஹேஸ்வரனின் தோட்டம் என, அழைக்கின்றனர்.
கோவிலுக்கு வர, சரியான பாதை இல்லை. எனவே வழி ஏற்படுத்தி தரும்படி, கிராம பஞ்சாயத்திடம், வேண்டுகோள் விடுத்துள்ளோம். வழி இருந்தால் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியாக இருக்கும்.