உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; வழியெங்கும் திருச்சப்பரத்துக்கு மக்கள் வரவேற்பு கொடுத்ததால், கிராமங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்திமலை அடிவாரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஒருங்கே அருள்பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
பழமையான இக்கோவிலில், மூலவர் கோபுரம் ஆண்டுக்கு ஒரு முறை, மஹா சிவராத்திரியன்று நிறுவும் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. கோபுரமாக நிறுவப்படும் திருச்சப்பரம் பூலாங்கிணறு கிராமத்தில் உருவாக்கப்பட்டு, நேற்று காலை பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், திருச்சப்பரம், 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக ஊர்வலமாக திருமூர்த்திமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. வேளாண் வளம் செழிக்க, நெல், மொச்சை, கொண்டைக்கடலை, நிலக்கடலை, கொத்தமல்லி உள்ளிட்ட தானியங்களை சமர்ப்பித்து வழிபட்டனர். உப்பு, பழங்களை திருச்சப்பரத்தின் மீது வீசி மக்கள் வரவேற்றனர். பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. திருச்சப்பரம், திருமூர்த்திமலை யானைக்குன்று பகுதியை எட்டியதும், மலைவாழ் மக்கள், பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க திருச்சப்பரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர், அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நிறுவப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர், மஹா சிவராத்திரி பூஜைகள் கோவிலில் துவங்கியது. திருச்சப்பர ஊர்வலத்தால், கிராமங்கள் விழாக்கோலமாககாட்சியளித்தன.