திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா; லட்சார்ச்சனை
பதிவு செய்த நாள்
16
பிப் 2026 10:02
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத அமாவாசைக்கு முன் வரும் திரயோதசி மற்றும் சதுர்த்தசி திதி சந்திக்கும் நாளில், பிரம்மா, விஷ்ணு இடையே யார் பெரியவர்? என்ற அகந்தையை ஒழித்து, ஜோதி பிழம்பாக, லிங்கோத்பவர் வடிவாக, அருணாசலேஸ்வரர் காட்சி கொடுத்த தலம் திருவண்ணாமலை. இவ்வாறு காட்சி கொடுத்த நாளே, மஹா சிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூலவர் மற்றும் உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அதிகாலை, 5:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, முதல் கால பூஜை, இரவு, 11:30 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி மூல கருவறையின் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம், இன்று, 16ம் தேதி அதிகாலை, 2:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. கோவில் வளாகதத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். மேலும் உலக நன்மை வேண்டி, பகல் மற்றும் இரவு முழுவதும், அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன், கிரிவலம், நாதஸ்வரம் மற்றும் தவில் இசை சங்கம் சார்பில், இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
|