திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கலியாந்துார் குளத்தை துார்வாரும் பணியின் போது, பழமையான சிவலிங்கம் மற்றும் நந்தி சிலையை கண்டெடுத்தனர். இதை தென்னக பண்பாட்டு ஆய்வு மையத்தினர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து, ஆய்வு மைய பேராசிரியர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், கோபி, மாரீஸ்வரன் கூறுகையில், ‘‘கலியாத்துாரில் இருந்த சிவன் கோவில் காலப்போக்கில் சிதிலமடைந்து விட்டது. முற்கால பாண்டியர்கள் காலமான, 10ம் நுாற்றாண்டில் தான், சதுர வடிவிலான ஆவுடையார் சிவலிங்கம் வடிவமைக்கப்படும். கலியாந்துாரிலும் அதே போன்று கிடைத்திருப்பதால், 10ம் நுாற்றாண்டை சேர்ந்த கோவில் என தெரிகிறது. ஏற்கனவே விநாயகர் சிலையும் இங்கு கிடைத்தது. ‘‘இரண்டு அடி நீள, அகலத்தில், 3 அடி உயர சிவலிங்கத்தை, பாறையில் நேர்த்தியாக செதுக்கியுள்ளனர். இங்கு, முறையான அகழாய்வு நடத்தினால், பல ஆதாரங்கள் கிடைக்கும்,’’ என்றனர்.