திருப்பருத்திக்குன்றத்தில், கி.பி., 6ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட சமணர் தலமான திரைலோக்கியநாதர் கோவில் உள்ளது. சமணர்களின் அடையாளமாக திகழும் பழமையான இக்கோவில், தமிழக தொல்லியல் துறை மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த சமணர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணியரும் காலை, மாலையில் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் 2012ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், கோவில் ராஜ கோபுரத்தில் செடிகள் வளர்ந்தும், பிற சன்னிதிகளின் மூலவர் கோபுரம், மண்டபம் உள்ளிட்டவை சேதமடைந்தும் உள்ளது. எனவே, இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த தமிழக தொல்லியல் துறை மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் திரைலோக்கியநாதர் கோவில் அறங்காவலர் நந்திமித்ரன் கூறியதாவது: ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், இக்கோவிலை புனரமைக்க பூர்வாங்க பணிகள் முடிந்துள்ளன. திருப்பணியை துவக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.