பல்லடத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில், கேட்டை நட்சத்திர பரிகார ஸ்தலமாக உள்ளது. இங்கு, 51வது குண்டம் திருவிழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, பிப்., 14 அன்று விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு வேள்வி வழிபாடுகள், திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்டவை நடந்தன. இன்று காலை, 7.00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்வு நடந்தது. தாய்மார்கள், இளம் பெண்கள், சிறுவர் சிறுமியர் மற்றும் முதியோர் என, வயது வித்தியாசம் இன்றி, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க, பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்காளி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, அங்காளம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் முப்பெரும் நற்பணி மன்றத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.