பரமேஸ்வரமங்கலம் கைலாசநாதர் கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
பதிவு செய்த நாள்
23
பிப் 2026 01:02
மாமல்லபுரம்: பரமேஸ்வரமங்கலம் கைலாசநாதர் கோவில், மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கூவத்துார் அடுத்த பரமேஸ்வரமங்கலம் பகுதியில், பாலாற்றின் இடையில் உள்ள குன்றில், கனகாம்பிகை உடனாய கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. மூலவர், சுற்று பிரகார தனித்தனி சன்னிதிகளில் விநாயகர், முருகன், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி ஆகிய சுவாமியர் அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து பூஜை கி.பி., 8ம் நுாற்றாண்டில், முதலாம் பரமேஸ்வர பல்லவன், கோவிலை கட்டியதாக கருதப்படுகிறது. தற்காலத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கே.கே.சாரிட்டபிள் டிரஸ்ட், கோவிலை புனரமைத்து நிர்வகித்து, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2013ல் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது, இடியில் சேதமடைந்த விமான கோபுரத்தை புனரமைத்தும், கோவிலுக்கு அலங்கார நுழைவாயில் அமைத்தும், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த 18ம் தேதி, கும்பாபிஷேக யாகசாலை வழிபாட்டு சடங்குகள் துவக்கப்பட்டன. அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுபெற்று, அனைத்து விமானங்கள், பரிவார மூர்த்திகள், விநாயகர் உள்ளிட்ட சுவாமியர், கைலாசநாதர், கனகாம்பிகை, உற்சவ மூர்த்திகள் என, அடுத்தடுத்து புனித நீரூற்றி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சுவாமி, அம்பாள் ஊஞ்சல் சேவையாற்றினர். பக்தர்கள் தரிசித்து வணங்கினர். அன்னதானமும் வழங்கப்பட்டது. காட்டுக்கூடலுார் காட்டுக்கூடலுாரில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வெகு விமரிசையாக நேற்று நடந்தது. காட்டுக்கூடலுாரில் பழமை வாய்ந்த மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த கிராமத்தினர், கடந்த சில ஆண்டுகளாக திருப்பணி மேற்கொண்டனர். திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள், கடந்த 20ம் தேதி துவங்கின. தொடர்ந்து கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை நடந்தது. நேற்று, காலை 9:30 மணிக்கு மாரியம்மன் கோவில் கோபுர விமானத்திற்கும், 10:00 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின், மாரியம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. காட் டுக்கூடலுார் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து, சுவாமியை வழிபட்டுச் சென்றனர். விழாவுக்கு, விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று முதல் 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறும்.
|