உத்திரமேரூர்: மாகரல், மாகறலீஸ்வரர் கோவிலில் மாசிமக விழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியம், மாகரல் கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான திருபுவனநாயகி உடனுறை மாகறலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசிமக விழா கோலாகலமாக நடப்பது வழக்கம்.
அதன்படி, நடப்பு ஆண்டிற்கான விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நேற்று காலை 9:30 மணிக்கு, கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
அப்போது, அப்பகுதியில் உள்ள கிராம தேவதை மற்றும் மாரியம்மன், கெங்கையம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதணை நடந்தது.
விழாவையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் பஞ்சமூரத்திகளின் வீதியுலா, சந்திரகேடயம், சூரிய, சந்திர பிரபை வாகன சேவை, நாக, சிம்ம, யானை வாகனங்களில் சுவாமி எழுந்தருளி முக்கிய வீதி வழியாக உலா வருகிறார். பிப்., 27ம் தேதி தேரோட்டம் நிகழ்ச்சியும், மார்ச் 3ல் தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.