திருப்புவனம்: தென்மாவட்டங்களில் மாரியம்மன் கோயில்களில் பங்குனி விழா தொடங்கிய நிலையில் திருப்புவனத்தில் கண்கவர் அக்னிசட்டி, பொம்மை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
மாசி, பங்குனி மாதங்களில் தென்மாவட்டங்களில் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும், திருப்புவனம், தாயமங்கலம், இருக்கன்குடி உள்ளிட்ட ஊர்களில் உள்ள அம்மன் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு பக்தர்கள் விரதமிருந்து அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, பொம்மை, பாதம், நாகம் உள்ளிட்டவைகளை சுமந்து வந்து செலுத்துவது வழக்கம்.
இதற்காக திருப்புவனம் வேளார் தெருவில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அக்னிசட்டி மற்றும் பொம்மைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், சுற்றுப்புற சூழலை பாதிக்காத பச்சை மண் சட்டிகள் இவை, தண்ணீரில் போட்டாலும் எளிதில் கரைந்து விடும், மண்ணை எந்த விதத்திலும் பாதிக்காது நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 சட்டிகள் வரை தயாரிக்கிறோம், பின் அதற்கு வர்ணம் பூசி அம்மன் படங்களை வரைந்து வெயிலில் காயவைத்து விற்பனை செய்கிறோம், அக்னிசட்டிகள், பாதம், பொம்மைகள் அதன் அளவுகளை பொறுத்து 200 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கிறோம் என்றனர்.