திருக்கோஷ்டியூர் மாசித் தெப்பம் : சந்திர கிரகணத்தால் குறைந்து பக்தர்கள் வருகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2026 03:03
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை முன்னிட்டு இன்று காலை நடந்த பகல் தெப்பத்தை பக்தர்கள் வழிபட்டனர். நேற்று சந்திரகிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை பகலில் சாத்தப்பட்டதால் பக்தர்கள் வருகை குறைவாக காணப்பட்டது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 11 நாட்கள் மாசித் தெப்ப உத்ஸவம் நடைபெறும். பிப்.21 ல் கொடியேற்றத்துடன் உத்ஸவம் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலையில் சுவாமி புறப்பாடும் இரவு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. உத்ஸவம் துவங்கிய நாள் முதல் . தெப்பக்குளக்கரையில் திரளாக பெண்கள் தீபவழிபாடு நடத்தி வந்தனர். நேற்று அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று வெண்ணெய்த்தாழி சேவை அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை 7:30 மணி அளவில் தங்கப்பல்லக்கில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் பெருமாள் கோயிலிருந்து புறப்பாடாகி தெப்பக்குளம் மண்டபம் முன் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனைக்கு பின்னர் காலை 10:51 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை ஒரு முறை வலம் வந்தார். குளத்தைச் சுற்றிலும் குழுமியிருந்த பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர். தொடர்ந்து பெருமாள் தெப்பமண்டபம் எழுந்தருளினார். இன்று சந்திரகிரகணத்தை முன்னிட்டு மதியம் 1:00 மணி முதல் இரவு 8 :00 மணி வரை கோயில், தெப்பமண்டபம் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது. இரவில் மீண்டும் தெப்பம் குளத்தில் வலம் வந்து பக்தர்கள் தரிசித்தனர். இன்று காலை தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறும். இரவு 9:30 மணிக்கு பெருமாள் கோயிலுக்கு புறப்பாடாகி மூலஸ்தானம் எழுந்தருளலுடன் உத்ஸவம் நிறைவடைகிறது.