சினக்கத்தூர் பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2026 08:03
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற சினக்கத்தூர் பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லாம் ஆண்டும் மாசி மாதம் "பூரம்" திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
நடப்பாண்டு திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று காலை பாரம்பரிய கலை வடிவங்களான "பூதன்-திறை"கள் அம்மன் சன்னதிக்கு வந்ததோடு விழா தொடங்கியது. தொடர்ந்து பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மதியம் கோவிலின் கீழ் உள்ள ஏழு உப கோவில்களில் இருந்து யானைகளின் அணிவகுப்பும் குதிரை வடிவங்களும் அம்மன் சன்னதியை நோக்கி வந்தது. பிற்பகல் 3 மணிக்கு குதிரை வடிவங்கள் கோவில் வளாகத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அணிவகுத்து போட்டி போட்டு கொண்டுள்ள குதிரை விளையாட்டு நடந்தது. இந்த விளையாட்டை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். அதேபோல் பஞ்ச வாத்தியம் முழங்க ஒற்றப்பாலம், பாலப்புரம், மீற்றன, எறக்கோட்டிரி, பல்லார்மங்கலம் ஆகிய உப கோவில்களின் 17 யானைகள் மேற்கு பகுதியிலும் தெக்குமங்கலம், வடக்குமங்கலம் ஆகிய உப கோவில்களில் இருந்து வந்த யானைகள் கிழக்கு பகுதியில் எதிர் நோக்கி அணிவகுத்து நின்று முத்துமணி குடைகள் மாற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. எட்டு மணிக்கு பிரம்மாண்ட வான வேடிக்கையும் நடந்த்து. தொடர்ந்து திருத்தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.