பதிவு செய்த நாள்
03
மார்
2026
08:03
வால்பாறை: நாடு முழுவதும் சந்திரகிரகண நிகழ்வு இன்று நடக்கிறது. இதையொட்டி, பெரும்பாலான கோவில்களில் இந்நிகழ்வின் போது நடை அடைக்கப்படுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை நகரில், மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுப்பிரமணிய சுவாமி கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இன்று (3ம்தேதி) மாலை, 3:20 முதல் மாலை, 6:47 வரை சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதனால், காலை, 6:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை மட்டுமே நடை திறக்கப்படும். பிற்பகல் 1:00 மணிக்கு மேல் கோவில் நடை அடைக்கப்படும். நாளை (4ம் தேதி) காலை, 6:00 மணி முதல் வழக்கம் போல் கோவில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். மேற்கண்ட தகவலை சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல்அலுவலர் ேஹமாசாலினி தெரிவித்துள்ளார்.
கடலுார்: கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி இன்று கோவில் நடை மூடப்படுகிறது.கடலுார், திருவந்திபுரத்தில் பிரசித்திப் பெற்ற தேவநாத சுவாமி கோவில், தேவநாத சுவாமிக்கு மாசி மகத்தை முன்னிட்டு இன்று 3ம் தேதி காலை சிறப்பு பூஜைகள் முடிந்து தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு எழுந்தருளச் செய்து, தீர்த்தவாரி நடக்கிறது. மேலும், சந்திர கிரகணம் நிகழ்வதால் இன்று அதிகாலை 3:00 மணி முதல், இரவு 11:00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுகிறது. இதனால் மூலவரை தரிசனம் செய்ய இயலாது. இத்தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் இன்று (மார்ச் 3) சந்திர கிரகணத்தை முன்னிட்டு பூஜை மற்றும் நடை திறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயில் நிர்வாக அலுவலர்கள் கூறியதாவது: இன்று (மார்ச் 3) சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதையொட்டி, கோயிலில் வழக்கமாக நடைபெறும் பூஜைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மதியம் 12:30 மணிக்கு உச்சிக்கால பூஜைகள் முடிக்கப்பட்டு திருக்கோயில் நடை அடைக்கப்படும். கிரகணம் முடிந்து இரவு 8:00 மணிக்கு கிரகண சாந்தி பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக கோயில் நடை மீண்டும் திறக்கப்படும்.எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நேர மாற்றத்தை கவனித்து, அதற்கேற்ப தங்களது தரிசனத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றனர்.