பதிவு செய்த நாள்
03
மார்
2026
08:03
அவிநாசி; தேவராயன்பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாசிமகத் தேர் விழா நடைபெற்றது.
அவிநாசி வட்டம், தேவராயன்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மாசிமகத் தேர் விழா நடைபெற்றது. மாசிமகத் தேர் திருவிழா, கடந்த 23ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து 24ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றம் நிகழ்ச்சிகளுடன் அபிஷேக ஆராதனை,சுவாமி திருவீதி உலா, அம்மை அழைத்தல் வரும் நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்றது. நேற்று விநாயகருக்கு 108 குடம் பால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோ பூஜை, ஸ்ரீ காமாட்சி அம்மன் தேருக்கு எழுந்தருளல், பொங்கல் வைத்தல் ஆகியவை நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். மாசிமகத் தேர்த்திருவிழாவில்,நேற்று மாலை திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம், ஸ்ரீ காமாட்சி சுவாமிகள் தலைமையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று வண்டித்தாரை, பரிவேட்டையும்,நாளை தரிசனம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது .5ம் தேதி ஸ்ரீ முத்துக்குமாரசுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவு பெறுகிறது.