உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரத்தியங்கரா கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் அகத்தீஸ்வரர் கோவிலில் அமாவாசை தோறும் பிரத்தியங்கரா தேவி அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடந்து வருகிறது. மார்கழி அமாவாசையான நேற்று காலை 10.30 மணிக்கு யாகம் துவங்கி சங்கல்பம், சிறப்பு பூஜைகள் நடந்தது. 11.45 மணிக்கு யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நெய், பழ வகைகள், பால் யாககுண்டத்தில் ஊற்றப்பட்டன. பக்தர்கள் வேண்டுதலின்பேரில் வெற்றிலையில் எழுதி யாக குண்டத்தில் போட்டனர். கோவில் அறங்காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில் ஐந்து குருக்கள் யாகம் நடத்தினர். யாகத்தையொட்டி பிரத்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.