பழநி முருகன் கோவில் பங்குனி உத்திரவிழாவில் நாளை திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2026 10:03
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா (மார்ச் 31) நாளை திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு திருகல்யாணம் நடக்கும். பழநி கோயிலில் பங்குனி உத்திர விழா திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் மார்ச் 26ல் காலை கொடியேற்றம் நடந்தது. பங்குனி உத்திரவிழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், நாளை (மார்ச் 31ல்) இரவு 7:00 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் நடக்கும்.
தேரோட்டம்: நாளை மாலை வெள்ளி தேரோட்டம் கிரி வீதிகளில் நடக்கும். ஏப்.1ல் மாலை 4:30 மணிக்கு பங்குனி உத்திரத் தேர் வடம் பிடித்து தேரோட்டம் கிரிவீதிகளில் நடக்கும். அதன் பின் தேர்க்கால் பார்த்தல் நடக்கும். உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏப்.,4 அன்று இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடையும். விழா நாட்களில் வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கடா, தங்கமயில், யானை, தங்க குதிரை, வெள்ளி பிடாரிமயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மேலும் பழநி கிரிவிதி குடமுழுக்கு விழா அரங்கத்தில் பங்குனி உத்திர கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
தங்க ரத புறப்பாடு நிறுத்தம்: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் நேற்று (மார்ச் 30) முதல் ஏப்.3 வரை ஐந்து நாட்களுக்கு தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது. ஏப்.,4 அன்று வழக்கம் போல் தங்க ரத சுவாமி புறப்பாடு நடைபெறும். மார்ச் 31, ஏப்.,1,2 ஆகிய நாட்களில் பழநி முருகன் கோயிலில் அனைத்து தரிசன வழிகளிலும் கட்டணமில்லாமல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.