தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கம்
பதிவு செய்த நாள்
30
மார் 2026 12:03
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான பொங்கல் விழா வருகிற ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோயில் உள்ளது.இங்கு வருடம் தோறும் தொடர்ந்து 10 நாட்கள் பங்குனி பொங்கல் விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. விழா நாட்களின் போது தமிழகம் முழுவதிலும் இருந்து வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி,ஆயிரங்கண் பானை, கரும்பாலை தொட்டில், முடி காணிக்கை, அங்க பிரதட்சணம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு,கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து அம்மனை வேண்டி வருகின்றனர்.இந்த வருடத்திற்கான விழாவை முன்னிட்டு நேற்று இரவு 9:30 மணிக்கு கொடிமரத்திற்கு முன்பாக ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்ற பின்னர் 10:30 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற பிறகு மஞ்சள் கயிறை கொண்டு காப்பு கட்டப்பட்டு, தீபாராதனை நடந்தது. அப்போது குழுமியிருந்த ஏராளமான பக்தர்கள் அருள் வந்து சாமி ஆடினர். ஏராளமான பக்தர்கள் தங்களது கைகளிலும் மஞ்சள் கயிறால் காப்பு கட்டி கொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. விழாவில் தாயமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றம் நடந்ததை தொடர்ந்து இன்று முதல் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தர உள்ளதால் மதுரை, மானாமதுரை, இளையான்குடி, பரமக்குடி, காரைக்குடி,அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா வருகிற ஏப்.5ம் தேதியும், மின் அலங்கார தேரோட்டம் 6ம் தேதியும் நடைபெற உள்ளது.8ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள், தாயமங்கலம் கிராமத்தினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
|