திருப்பரங்குன்றம் மலை; புதிய வழக்கு அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2026 05:04
மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் ரம்ஜான் பண்டிகையின் போது முஸ்லிம்களை தொழுகை நடத்த அனுமதித்தது தொடர்பாக, அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது. ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற விடாமல் தமிழக அரசு தடுக்கிறது. இதற்காக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் அரசு சட்டப்போராட்டம் நடத்துகிறது. தீபத்துாணில் தீபம் ஏற்ற மற்றும் அங்கு வழிபட ஹிந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையின் போது மலையில் தொழுகை நடத்த முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவில்லை. இது சட்டத்திற்கு புறம்பானது. மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், தொல்லியல்துறை அலுவலர், சுப்பிரமணியசுவாமி கோயில் இணை கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய, மாநில உள்துறை செயலர்களுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு:இதுபோல் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்வீர்கள். நீதிமன்றத்திற்கு வேறு வேலை இல்லையா. ஏற்கனவே இதுபோன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்க, மனுதாரரால் நீதிமன்றத்தில் ரூ.10 லட்சத்தை டெபாசிட் செய்ய முடியுமா. ஊடகங்களில் தனது பெயர் வெளிவரவேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற மனுக்களை மனுதாரர் தொடர்ந்து தாக்கல் செய்வதாக தெரிகிறது.
இவ்வாறு அதிருப்தியை வெளியிட்டனர்.பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இது விளம்பர நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டனர்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‛அபராதம் விதித்ததை நீக்கம் செய்ய வேண்டும்,’ என்றார். நீதிபதிகள், ‛வருங்காலங்களில் இதுபோன்ற வழக்கு தாக்கல் செய்ய மாட்டேன் என மனுதாரர் உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் அபராதத்தை நீக்க பரிசீலிக்கப்படும்,’ என்றனர்.