வாணாபுரம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 11 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கோமாதா உண்டியல், 2 திருப்பணி உண்டியல் மற்றும் 4 தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 23ம் தேதி உண்டியல் திறக்கப்பட்ட நிலையில், மூன்றரை மாதங்களுக்கு பிறகு உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. கள்ளக்குறிச்சி அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் மேற்பார்வையில் உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டது. சங்கராபுரம் சரக ஆய்வாளர் கவின்குமார், செயல் அலுவலர் சூரியநாராயணன் மேற்பார்வையில், எழுத்தர் லோகநாதன், ஊழியர் சிவபிரகாஷ் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். நிரந்தர உண்டியல்களில் 23 லட்சத்து 5 ஆயிரத்து 203 ரூபாயும், 16 கிராம் தங்கம், 85 கிராம் வெள்ளிப்பொருட்கள் இருந்தது. கோமாதா உண்டியலில் 89 ஆயிரத்து 133, திருப்பணி உண்டியல்களில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 997 ரூபாய் என மொத்தமாக 25 லட்சத்து 36 ஆயிரத்து 880 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அறங்காவலர் குழு தலைவர் மாசிலாமணி, உறுப்பினர்கள் சங்கர், சிவராமன், கலியபெருமாள், சாந்தி உடனிருந்தனர்.