பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் சேர்ந்த, விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி(ஈஸ்வரன்) கோயில் உள்ளது. இங்கு ஏப்., 19 இரவு காப்பு கட்டப்பட்டு, ஏப்., 20 காலை 9:00 மணிக்கு மேல் நந்தி கொடியேற்றப்பட்டு விழா துவங்குகிறது. தினமும் இரவு சுவாமி பிரியாவிடையுடனும், விசாலாட்சி அம்மன் தனி வாகனத்தில் என பஞ்ச மூர்த்திகளுடன் உலா வருவர். ஏப்., 26 குதிரை வாகனத்தில் திக் விஜயம், மறுநாள் கமல வாகனத்தில் அம்மன் தபசு கோலத்தில் அருள்பாலிக்கிறார். அன்று மாலை 4:00 மணிக்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நடக்கிறது. ஏப்., 28 காலை 10:45 மணி முதல் 11:45 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடக்கும். மறுநாள் 9:15 மணிக்கு சித்திரை தேரோட்டமும், ஏப்., 30 இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர். இதேபோல் பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 19 காலை கொடியேற்றப்பட்டு துவங்கும். ஏப்., 28 மாலை 6:00 மணிக்கு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்., 29 காலை தேரோட்டமும், மறுநாள் நந்தி கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடையும்.