பதிவு செய்த நாள்
12
ஏப்
2026
10:04
அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.
அருகம்பாளையத்தில், பழமையான பால பட்டாபிராமர் கோவிலில், விமானம், முன் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த 10ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் அஷ்டதிக்கு பாலகர்களுக்கு பூஜை நடந்தது. நேற்றுமுன்தினம் மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில் இருந்து முளைப்பாரி, விமான கலசங்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.
விமான கலசங்கள் கோபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இன்று காலை 9:40 மணிக்கு, விமான கலசம், ஸ்ரீ பால பட்டாபிராமர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தச தரிசனம், அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மூன்று மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
lநாளை (13ம் தேதி) காலை 9:00 மணிக்கு பாலபட்டாபிராமருக்கும், பெருந்தேவிக்கும், திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மாலை 3:00 மணிக்கு 3,008 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மாலை 5:00 மணிக்கு அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனையும், இரவு 7:00 மணிக்கு கும்பகோணம் விட்டல்தாஸ் மகராஜ் ராம நாம சங்கீர்த்தன பஜனையும் நடைபெறுகிறது.