திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2026 11:04
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை என்பதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் பக்தர்கள் பொது வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இன்று வார விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் காலை முதலே குவிந்தனர். சில பக்தர்கள் காவடிகள் எடுத்து மூலவரை தரிசித்தனர். பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரத்திற்கு மேல் கொளுத்தும் வெயிலிலும், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். முன்னதாக, இன்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. திருத்தணி இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில், 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.