பதிவு செய்த நாள்
17
ஜன
2013
11:01
பேட்டை:கீழக்கல்லூர் புரோவரிநாதர் கோயில் கும்பாபிஷேகம் 23ம் தேதி நடக்கிறது. பேட்டையை அடுத்துள்ள கீழக்கல்லூரில் புரோவரிநாதர் (சிவன்) கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயில் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இன்றி இக்கோயில் சிதிலம் அடைந்தது. இக்கோயிலுக்கு திருப்பணி, கும்பாபிஷேகம் நடத்த எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன்படி கோயிலில் சில மாதங்களுக்கு முன் ஆகம விதிப்படி பாலாலய பூஜைகள் செய்து திருப்பணி வேலைகள் துவங்கின. சுவாமி கருவறை, விமானம் முழுமையாக அகற்றப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டது. அம்பாள் சந்நிதி விமானம் அகற்றப்பட்டு புதிய விமானம் கட்டப்பட்டது. பிரகாரங்கள் சீரமைக்கப்பட்டு மதில்சுவர்கள் கட்டப்பட்டன. சாஸ்தா, சுப்பிரமணியர், விநாயகர் சந்நிதிகள் புதுப்பிக்கப்பட்டன. தட்சிணாமூர்த்தி, பைரவர், சனி பகவான், சூரியன், சந்திரன் பரிவார தெய்வங்களுக்கு புதிய சந்நிதிகள் அமைக்கப்பட்டன. உட்பிரகார நடைபாதை சரிசெய்யப்பட்டு மேல்தள ஓடு பதிக்கப்பட்டது. எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் சொந்த பொறுப்பில், மானூர் யூனியன் சேர்மன் கல்லூர் வேலாயுதம் மேற்பார்வையில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி நிறைவு பெற்றுள்ளது. கோயிலில் 23ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. கும்பாபிஷேக பணியில் பங்கு கொள்பவர்கள், பொறுப்பேற்று செய்பவர்கள் 94436 95550 செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பக்தர்கள் பேரவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.