பதிவு செய்த நாள்
18
ஜன
2013
11:01
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நாளை(19ம் தேதி) துவங்குகிறது. "மேலத்திருப்பதி என்றழைக்கப்படும் மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவில் பழமையானது. கோவை-சத்தி பாதையில், அன்னூரை அடுத்த பசூரிலிருந்து, ஆறு கி.மீ., தொலைவில் இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் 49ம் ஆண்டு தேர்த்திருவிழா நாளை(19ம் தேதி) இரவு வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது. பெருமாளுக்கு காப்பு கட்டுதல், கருடாழ்வாருக்கு திருமஞ்சனம் மற்றும் கொடியேற்றம் 20ம் தேதி காலையில் நடக்கிறது. இரவு திக்பாலகர்களுக்கு காப்பு கட்டுதல், அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. 21ம் தேதி இரவு 8.00 மணிக்கு, சிம்ம வாகனத்திலும், 22ம் தேதி இரவு அனுமந்த வாகனத்திலும், 23 ம் தேதி கருட வாகனத்திலும் திருவீதியுலா நடக்கிறது. 24ம் தேதி காலை 10.00 மணிக்கு அம்மன் அழைத்தல், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
இரவு புஷ்பக விமானத்தில், திருவீதியுலா நடக்கிறது. 25ம் தேதி இரவு யானை வாகனத்தில் திருவீதியுலா நடக்கிறது. 26ம் தேதி அதிகாலையில் சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11.00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. 27ம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர். கோவிலில் புதிதாக ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணி துவங்க உள்ளது. "25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை அளிப்போர் பெயர் கோவில் கல்வெட்டில் பதிக்கப்படும், என, அறிவிக்கப்பட்டுள்ளது.