பதிவு செய்த நாள்
18
ஜன
2013
11:01
படப்பை: கோவில் குளத்தில் கழிவுநீர் கலந்து வருவதை தடுத்து, குளத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சியில், ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட, மக்கள் வசித்து வருகின்றனர். மணிமங்கலம் - முடிச்சூர் சாலையில், ஸ்ரீ ஆலடியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே உள்ள குளத்தில், அப்பகுதியை சுற்றியுள்ள, குடியிருப்பு பகுதிகளில் இருந்து, வெளியேறும் கழிவுநீர், குளத்தில் கலந்து வருகிறது.இதனால், குளத்தில் உள்ள மாசடைந்து பாசி படர்ந்து உள்ளது. தொடர்ந்து கழிவுநீர் கலந்து வருவதால், இந்த குளம் ஒட்டுமொத்த, கழிவுநீர் தேக்க இடமாக மாறிவிட்டது. குளத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், நோய் தொற்றும் அபாயம் நிலவி வருகிறது.இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:இந்த குளம், 10 வருடங்களுக்கு முன், தூய்மையாக இருந்தது. ஏரியில் இருந்து கால்வாய் மூலம், இந்த குளத்திற்கு வரும் தண்ணீர், மற்றொரு வழியாக வெளியேறும். தண்ணீர் ஓட்டம் இருந்ததால், குளத்தின் நீர் தூய்மையாக இருந்தது.தற்போது, இந்த குளத்திற்கு வரும், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. குளத்தை சீரமைத்து குளத்தை சுற்றி நடைபாதை அமைத்து, மதில் சுவர் கட்ட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதுகுறித்து, ஊராட்சி தலைவர் மோகாவிடம் கேட்டபோது, ""இந்த பகுதியில், கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். நிதி கிடைத்ததும், குளம் சீரமைக்கப்படும்,என்றார்.