உத்திரமேரூரில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவ விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தர வரதராஜ பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கடந்த 26ம் தேதி கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, சுந்தர வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, தினமும் இரவு நேரங்களில் சிம்ம வாகனம், ஹனும வாகனம், யானை வாகனங்களில் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு பூஜைகளும், ஆராதனையும் நடந்தன. இன்று காலை 6:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தர வரதராஜ பெருமாள் எழுந்தருளி ஊர்வலமாக புறப்பட்டார். உத்திரமேரூர் நகர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து, காலை 9:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தார். இதில், உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.