நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை பிரமோற்சவ விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் உற்சவர் வீரராகவ பெருமாள் தினமும் சிறப்பு அலங்காரத்தில், வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். ஒன்பதாம் நாளான இன்று காலை, ஆள்மேல் பல்லக்கு நடந்தது. பகல் 11:00 மணியளவில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், ஹிருதாபநாசினி திருக்குளத்தில், வீரராகவ பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வார் குளத்தில் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஏராளமான பக்தர்களும், தீர்த்தவாரி நிகழ்ச்சியில் புனித நீராடினர். இரவு, விஜயகோடி விமானம் புறப்பாடு சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மோற்சவத்தின் 10ம் நாளான நாளை பகல் 12:00 மணியளவில், த்வாதஸ ஆராதனம், இரவு வெட்டிவேர் சப்பரம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11:30 மணிக்கு, கொடியிறக்கத்துடன், சித்திரை பிரம்மோத்சவம் நிறைபெறுகிறது.