பதிவு செய்த நாள்
19
ஜன
2013
11:01
திருவாரூர்: ஞானபுரி சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்ஜநேயர் கோவிலில், கர்ப்பக்கிரக கருங்கல் நிலைவாசல் பிரதிஷ்டை நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி அடுத்த திருவோணமங்கலம் ஞானபுரியில், கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி, 32 அடி உயர விஸ்வரூப சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்ஜநேயர் சிலை பிரதிஷ்டை செய்து, கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
வாசக்கால் பிரதிஷ்டை: இந்நிலையில், சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்ஜநேயர் சன்னதி, ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சன்னதி, கோதண்டராமர் சன்னதி, கர்ப்பக்கிரக கருங்கல் நிலை வாசக்கால் பிரதிஷ்டை நேற்று காலை நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. பின், விஸ்வ ரூப சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்ஜநேயர், லட்சுமி நரசிம்மர், சீதாதேவி சமேத கோதண்ட ராமர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. இதையடுத்து, 34 அடி உயரமுள்ள ஒரே கருங்கல்லால் ஆன கர்ப்பகிரக கருங்கல் நிலை வாசக்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ராட்சச கிரேன் மூலம் 34 அடி உயர கருங்கல் கர்ப்பகிரக நிலை வாசக்கால் தூக்கி நிறுத்தப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. கர்ப்பகிரக கருங்கல் நிலைவாசகால் பிரதிஷ்டை சிறப்பு ஹோமம், வைகாநாச ஆகம முறைப்படி, ஆகம பண்டிதர்கள் கீழையூர் சவுமியநாராயணபட்டர், பப்பாகுடி வேங்கடேச பட்டர் தலைமையில் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.