பதிவு செய்த நாள்
22
மே
2026
10:05
பெங்களூரு; சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. முக்கிய பிரமுகர்கள், வாழும் கலை மையத்திற்கு வந்து, ரவிசங்கர் குருஜியின் ஆசிர்வாதம் பெற்று பரவசம் அடைந்தனர்.
பெங்களூரு கனகபுரா சாலையில் உள்ள சர்வதேச வாழும் கலை மையத்தின், 45வது ஆண்டு விழா, மையத்தின் நிறுவனர் ரவிசங்கர் குருஜியின், 70வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம், கடந்த 10ம் தேதி துவங்கியது. முதல் நாளன்று பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நேற்றுடன் விழா நிறைவு பெற்றது. விழா துவங்கியதில் இருந்து நேற்று வரை, நாட்டின் மிக முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் வாழும் கலை மையத்திற்கு வந்து, ரவிசங்கர் குருஜியிடம் ஆசிர்வாதம் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர். விழாவின் சிகர நாளான நேற்று, புகழ்பெற்ற பனாரஸ் கரானா பாடகரும், ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவருமான சஜன் மிஸ்ராவின் இசை நிகழ்ச்சி நடந்தது.
உத்தர பிரதேச மாநில சுற்றுலா மற்றும் கலாசார துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியால், இசை, ஆன்மிகத்தால், வாழும் கலை மையம் நேற்று நிரம்பி காணப்பட்டது. வாரணாசியின் ஆன்மிகம் மற்றும் இசை பாரம்பரியத்தையும், இந்த இசை நிகழ்ச்சி முன்னெடுத்து சென்றது.நிகழ்ச்சியில் சஜன் மிஸ்ரா பேசுகையில், ‘‘இவ்வளவு நீண்ட காலமாக, ஒரு குறிப்பிட்ட அமைப்பின் தரம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதற்கு, ரவிசங்கர் குருஜியின் அற்புதமே காரணம். அவருடைய பார்வை பரந்த நோக்கம் கொண்டது,’’ என்றார். உலகம் முழுதும் அமைதி, மனித உணர்வுகள், ஆன்மிக மேம்பாட்டிற்காக ரவிசங்கர் குருஜி ஆற்றிய அசாதாரண பங்களிப்புக்காக, அவருக்கு ‘உலகளாவிய ஆன்மிக மாஸ்டர் மைண்ட்’ விருதை, மாஸ்டர் மைண்ட் விருதுகள் தலைவரும், நிறுவனருமான மன்சூர் அல் ஒபைத்லி வழங்கினார். வரும், 24ம் தேதி வரை, சர்வதேச வாழும் கலை மையத்தின் பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தை நல திட்ட குழுவை சேர்ந்த பெண்களால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சி நடக்க உள்ளது.