பதிவு செய்த நாள்
03
ஜூன்
2026
09:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாள் உத்சவமான இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவம் கடந்த 28ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தங்க சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் வீதியுலா வந்தார். ஆறாம் நாள் உத்சவமான நேற்று காலை தங்க பல்லக்கில், வேணுகோபாலன் திருக் கோலத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் வீதி உலா வந்தார். இந்நிலையில், பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாள் பிரபல உத்சவமான தேரோட்டம் இன்று காலை நடக்கிறது.
இதில், அதிகாலை 3:00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு, சன்னிதி தெரு, செட்டி தெரு, டி.கே.நம்பி தெரு வழியாக வரதராஜ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பல்வேறு பூஜைகளுக்குப்பின் காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்தனர். இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வந்தார். உத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி, பணியாளர்கள், கோவில் பட்டாச்சாரியார்கள், உபயதாரர்கள் இணைந்து செய்திருந்தனர்.