‘அகங்காரம் துறந்தால் ஆனந்தம் கிடைக்கும்’ சுவாமி கவுதமானந்தர் அருளுரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2026 10:06
மதுரை: "நம் சுயநலத்தை துறந்து, அகங்காரம் இல்லாமல் கடவுளிடம் சரணடையும்போது வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெறலாம்," என சுவாமி கவுதமானந்தர் மதுரையில் அருளுரை வழங்கினார்.
உலகளவிலான ராமகிருஷ்ண மடம், மிஷனின் தலைவர் சுவாமி கவுதமானந்தர் நேற்று பக்தர்களுக்கு வழங்கிய அருளுரையில் பேசியதாவது:
கிடைத்தற்கு அரிய மனிதப்பிறவியை சரியாக பயன்படுத்துபவர்கள் ஒருசிலர் மட்டுமே. நம் வாழ்வை கடவுளுக்கு அர்ப்பணித்தால் மட்டுமே உண்மையான அமைதியும், ஆனந்தமும் கிடைக்கும். உலகப்பொருட்களை தேடி செல்வது வாழ்க்கை நடத்த உதவுமே தவிர உண்மையான அமைதியையும், ஆனந்தத்தையும் கொண்டு வராது. கடவுளை சரணடைந்து, உண்மையான பக்தியுடன் வாழ்பவர்கள் மிகவும் பாக்கியவான்கள்.
தன்னை சரணடைந்து வாழ்பவர்களுக்கு வேண்டிய பணிகளை கடவுள் செய்வார்.
உலகில் அமைதியும், ஆனந்தமும் நிலவ வேண்டுமென்றால் மக்களிடையே ஒற்றுமை அவசியம். அனைவரும் சுயநலத்தை துறந்து கடவுள் பக்தியுடன் வாழ வேண்டும்.
அகங்காரம் என்பது மலைக்குன்று போன்றது. மலைக்குன்றின் மேல் பெய்கின்ற மழைநீர் வழிந்து ஓடிவிடும். அதுபோல் அகங்காரம் உள்ள மனதில் கடவுள் இருக்க மாட்டார். நம் சுயநலத்தை துறந்து அகங்காரம் இல்லாமல் கடவுளை சரணடைந்து வாழ்ந்தால் உண்மையான அமைதியும், ஆனந்தமும் வாழ்வில் பெறலாம் என்றார்.