மயிலாடுதுறை ஞானபுரீசுவரர் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2026 11:06
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீசுவரர் கோயில் தேரோட்டம். இரண்டு தேர்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடைபெற்ற தேரோட்டத்தில் தருமபுரம் ஆதீனம், மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களுக்கு உதவியாக யானை தேரை முட்டி தள்ளி உதவியது பிரமிப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை தருமபுரத்தில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் உள்ள ஞானபுரீசுவரர் கோயிலில் வைகாசி பெருவிழா மற்றும் ஆதீன குருமுதல்வர் குருபூஜைவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் நிகழாண்டு உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இரண்டு தேர்களில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி அம்பாள் எழுந்தருள செய்யப்பட்டனர். கீழ வீதியில் தொடங்கிய தேரோட்டம் ஆதினத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் வலம் வந்தது. இதில் தருமபுரம் ஆதீனம், பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று வடம் பிடித்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு உதவியாக ஞானாம்பிகை யானை தேரை முட்டி தள்ளி உதவியது அனைவரும் பிரமிப்பாக பார்த்தனர். நான்கு வீதிகளை வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு தருமபுரம் ஆதீனம் நீர்மோர் வழங்கினார். விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை அதிகாலை தருமபுரம் ஆதீனம் வெள்ளிப் பல்லக்கில் ஆதின குருமூர்த்தங்களுக்கு சென்று வழிபாடு நடத்தும் நிகழ்வும், நாளை மறுநாள் இரவு 8 மணி அளவில் ஆதீனகர்த்தர் சிவிகை பல்லக்கில் எழுந்தருள, அவரை பக்தர்கள் சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வரும் பட்டண பிரவேசம் நிகழ்வும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.