திருப்பதியில் ஏஐ மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் பக்தர்களுக்கு சிறந்த சேவை; அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2026 11:06
திருமலை: திருப்பதி கோவிலில் ஏஐ தொழில்நுட்பம் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி பக்தர்களுக்கான சேவை சிறப்பான முறையில் வழங்கப்படுவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அவர் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்குப் பிறகு, ரங்கநாயகுல மண்டபத்தில் வேத பண்டிதர்கள், அவருக்கு ஆசிர்வாதம் வழங்கினர். தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அதிகாரி எம். ரவிச்சந்திரா, அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஸ்ரீவாரி தீர்த்த பிரசாதங்களையும், சுவாமியின் திருவுருவப் படத்தையும் வழங்கினார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அவனது தாயாரின் பெயரில் அமைச்சர் பியூஷ் கோயல் மரக்கன்று ஒன்றை நட்டார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் பல்வேறு சேவைகளை உடனுக்குடன் கண்காணிக்க முடிகிறது. தங்கும் அறைகளின் இருப்பு, பக்தர்களின் நடமாட்டம், தரிசன வரிசைகள் மற்றும் லட்டு பிரசாத விநியோகம் ஆகியவற்றை இந்த மையம் மூலம் நேரடியாகக் கண்காணிக்க முடியும். பக்தர்களுக்கான சேவைகளை மேலாண்மை செய்வதில் ஏஐ மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவது மிகவும் பாராட்டத்தக்கது, இவ்வாறு அவர் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு திருமலைக்குச் சென்று, அங்குள்ள மூலவரான ஸ்ரீவாருவின் அருளைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். நாட்டின் சேவைக்காகவும் மக்களின் நலனுக்காகவும் இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கான வலிமையை அருளுமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி xசி. வெங்கையா சௌதரி, கோயில் துணை நிர்வாக அதிகாரி லோகநாதம் மற்றும் பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர்.