அரவிந்தரின் ஆசீர்வாதங்களால் வளர்கிறோம் ஆரோவில்லில் கவர்னர் அர்லேகர் பேச்சு
பதிவு செய்த நாள்
05
ஜூன் 2026 05:06
வானுார்: ‘அன்னை, அரவிந்தரின் ஆசீர்வாதங்களால் நாம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறோம்’ என தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறினார். தமிழக கவர்னரும், ஆரோவில் அறக்கட்டளை குழுவின் தலைவராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சர்வதேச நகரமான ஆரோவில் பகுதிக்கு வருகை தந்தார். அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, பூக்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து பாரத் நிவாசில் நடக்கும் கண்காட்சியை பார்வையிட்ட கவர்னர், பேட்டரி வாகனத்தில் ஆரோவில் அறக்கட்டளை குழுவினருடன், மாத்ரி மந்திர் தியான மையத்தை பார்வையிட்டார். பின், யூனிட்டி பெவிலியனில் நடந்த ஆரோவில் பணிக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ஆரோவில் வாசிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், ஆரோவில் குடியிருப்பு வாசிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி அவர் பேசியதாவது: ஆரோவில்லில் அரவிந்தரும், அன்னையும் நம்மைச் சுற்றி இருப்பதையும், ஆசிர்வதிப்பதையும் நம்மால் உணர முடிகிறது. இங்கே நாம் ஆரியன் என்ற வார்த்தையைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. ஆரியன் என்பது ஒரு இனம் அல்ல. ஆரியன் என்பது இந்த நாட்டு மக்களின் ஒரு குணம். மக்களிடையே உள்ள இந்த நற்குணம் உலகில் உள்ள மனிதர்களைச் சென்றடைய வேண்டும். இது உலகத்தை மகிழ்வுக்கு உள்ளாக்கும். அதைத்தான் அன்னை நமக்குக் கற்பித்தார். அவருடைய கனவுகள், அரவிந்தரின் கனவுகளைப் போலவே இருந்தன. அடுத்த 100 ஆண்டுகளில் இந்தியா இந்த முழு உலகிற்கும் வழிகாட்டும் என்று அரவிந்தர் கணித்திருந்தார். அவருடைய கணிப்பு இப்போது உண்மையாகி வருகிறது. முழு உலகமும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நம் நாடு உலகிற்கு நாம் எப்போதும் வழிகாட்டும் விஸ்குருதான். வழிகாட்டியாக அல்லது விஸ்வகுருவாக இருக்கும் அந்த உணர்வு, நாம் எப்போதுமே இருந்த விஸ்வகுருதான். ஆனால், நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கும், நமது பழக்கவழக்கங்கள், நமது மாபெரும் கலாசாரம், சனாதன பரம்பரை ஆகியவற்றை அழிப்பதற்குமே மெக்காலே திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் நமது எண்ணங்கள் வழி நடத்தப்பட்டன. இப்போது அவைகள் மாறுகின்றன. விஷயங்கள் மாறிவிட்டன. இனி மெக்காலேக்கள் இருக்க மாட்டார்கள். அன்னை, அரவிந்தரின் ஆசீர்வாதங்களால் நாம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறோம். நமது கலாசாரத்துடன் கலந்திருக்க வேண்டிய கல்வியே நமக்குக் கற்பிக்கப்படவில்லை. ஆனால் அது இப்போது நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. இது போன்ற எல்லா விஷயங்களுக்கும் இந்த இடம் ஒரு வழிகாட்டியாகும். தமிழ்நாட்டின் கவர்னராக இருப்பது ஒரு பாக்கியம். அன்னை எங்களுக்கு வழங்கியிருக்கும், இந்தச் சூழலை அனுபவிப்பதால் அதிக பாக்கியசாலியாக உள்ளேன். இங்கே எதிர்மறை எண்ணங்கள் கிடையாது. இங்கே யாரும் எதிர்மறை எண்ணங்களை அனுபவிக்கவும் முடியாது. எந்தவொரு நபரும், சிறிது நேரத்திற்குக்கூட, இங்கிருந்து நேர்மறை எண்ணங்களை மட்டுமே எடுத்துக்கொள்வார். உலகில் நேர்மறை எண்ணங்கள் நிறைந்துள்ளன. கல்வித்துறையே இதை பரப்புவதற்குச் சிறந்த களம். இவ்வாறு கவர்னர் பேசினார்.
|