பதிவு செய்த நாள்
26
ஜூன்
2026
10:06
பல்லடம் ; பல்லடத்தில், பிரசித்தி பெற்ற அருளானந்த ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பல்லடம் பட்டேல் வீதியில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருளானந்த ஈஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில், பல நூறு ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல், பக்தர்களின் பங்களிப்புடன், கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக, ஜூன் 21 அன்று, விநாயகர் வழிபாடு, கணபதி மற்றும் நவகிரக ஹோமங்கள், கோ பூஜை, அஸ்வ பூஜை ஆகியவற்றுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. மாலை, 5.00 மணிக்கு, அங்காளம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து, முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால வேள்வி வழிபாடுகள் நடந்தன. நேற்று முன்தினம் அதிகாலை, 4.00 மணிக்கு, நான்காம் கால வேள்வி வழிபாடும், இதனையடுத்து, காலை, 6.00 மணிக்கு மேல், பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் கோவிலை சுற்றி வலமாக எடுத்து புறப்பட்டு, கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அரோகரா கோஷம் முழங்க, பக்தர்கள் கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.