நடுநாட்டு திருப்பதி. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. முதல் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக புராதான இதிகாசங்களில் குறிப்பிடப்படுகிறது. இத்தனை பழமையும், பெருமையும் மிக்க திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், கும்பாபிஷேகம் எனப்படும் மகா சம்ப்ரோக்ஷணம் வரும் 5ம் தேதி நடக்கிறது. கோவிலின் நுழைவு வாயிலில் அமைந்திருக்கும் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு ராஜகோபுரம், கட்டை கோபுரம் எனப்படும் வடக்கு ராஜகோபுரம், பிரதான சன்னதிகள் மற்றும் விமானங்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 29ம் தேதி மாலை 6:00 மணிக்கு பகவத் அனுக்ஞை, புண்யாகவாசனம், 30ம் தேதி காலை 9:00 மணிக்கு அக்னிப் பிரதிஷ்டையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கி 5ம் தேதி வரை காலை, மாலை இருவேளைகளும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. கும்பாபிஷேக தினமான 5ம் தேதி காலை 6:00 மணிக்கு அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், பிரதான ஹோமங்கள், 8:00 மணிக்கு பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் மூலஸ்தான விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலவர் பெருமாள், தாயார், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், மணவாள மாமுனிவர்கள் சன்னதிகளில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் எனப்படும் மகா சம்ப்ரோக்ஷணம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகி கோலாகலன் முன்னின்று செய்து வருகிறார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 1ம் தேதியிலிருந்து 5ம் தேதி வரை மூலவர் சேவை கிடையாது. அந்த நாட்களில் யாகசாலையில் மட்டுமே பக்தர்கள் சேவை சாதிக்கலாம் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.