திருப்புவனத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. ஆடி மாதத்தில் இங்கு பூக்குழி திருவிழா உற்சவம் வெகு விமரிசையாகநடைபெறும். இந்த ஆண்டு திருவிழா 21ம் தேதி கொடியற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை திரௌபதி அம்மனுக்கும் அர்ஜூனனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரௌபதி அம்மன், அர்ஜூனன், கிருஷ்ணர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். காலை 10:30 மணிக்கு கல்யாண ஊர்வலம் தொடங்கியது. காலை 11:00 மணிக்கு திரௌபதி அம்மன், அர்ஜூனன், கிருஷ்ணர் ஆகியோருக்கு பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம், சேலை ஆகியவை அணிவிக்கப்பட்டது. 11:20 மணிக்கு சுவாமிநாதன் பட்டர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். திருக்கல்யாண உற்சவம் முடிவடைந்த உடன் ஏழு வகையான தீபாராதனைகள் காட்டப்பட்டன. பக்தர்களுக்கு திருக்கல்யாண பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திருக்கல்யாண விருந்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை ஆறு மணிக்கு திருவிளக்கு பூஜையும், ஞாயிறு இரவு ஏழு மணிக்கு அர்ஜூனன் தபசு, 27ம் தேதி இரவு ஏழு மணிக்கு கூந்தல் விரிப்பு, 28ம் தேதி இரவு ஏழு மணிக்கு கூந்தல் முடிப்பு,29ம் தேதி இரவு ஏழு மணிக்கு பூக்குழி இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளது.