சர்வர் பிரச்சனை : ராமேஸ்வரம் கோயிலில் கட்டணம் இன்றி புனித நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2026 05:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் கணினியில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டதால், பக்தர்கள் பலர் கட்டணம் இன்றி புனித நீராடினார்கள்.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் நீராடி, சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஒரு பக்தர் ரூ. 25 கட்டணம் செலுத்தி புனித நீராடுவர். இந்த கட்டண ரசீதில் முறைகேடு நடந்ததால் சில ஆண்டுகளாக கணினி மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் 11:30 வரை கணினி மூலம் கட்டண ரசீது வழங்கினர். அடுத்த சில நிமிடத்தில் கணினியில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டு ரசிது கொடுக்க முடியாமல் போனது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், கூச்சலிட்டனர். இதன்பின் பக்தர்களை இலவசமாக புனித நீராட கோயில் நிர்வாகம் அனுமதித்தது. இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் மதியம் 12:30 மணி வரை கட்டணம் இன்றி இலவசமாக 22 தீர்த்தங்களை உற்சாகத்துடன் நீராடி சென்றனர். பின் மாலை 3:30 மணிக்கு கோயில் நடை திறந்ததும் கணினியில் சர்வர் பிரச்சனை சரியானது. பின் பக்தர்களுக்கு முறையாக கணினி மூலம் ரசீது வழங்கப்பட்டது.