பதிவு செய்த நாள்
06
பிப்
2013
04:02
ஒரு முறை நீராடினால் ஆயிரம் முறை நீராடிய பலனுள்ள ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம்: இந்தியாவின் வடக்கே உள்ள காசியிலும் தெற்கே உள்ள ராமேஸ்வரத்திலும் நீராடி சிவனை வழிபடுவது சிறப்பு. அதிலும் குறிப்பாக தை அமாவாசை தினத்தில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடலில் அக்னி தீர்த்தமாடி, பின் கோயிலில் உள்ள 22 தீர்த்தக்கட்டங்களில் தீர்த்தமாடிய பின ராமநாதர் திருக்கோயிலில்வழிபடுவது சிறப்பு. இங்குள்ள தீர்த்தக்கட்டத்தில் ஒரு முறை நீராடினால் ஆயிரம் தீர்த்தக்கட்டத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.
பூலோக கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் தை அமாவாசை விழா சிறப்பாக நடக்கும். தமிழகத்தின் புகழ்பெற்ற சிவஸ்தலமான சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்க சுவாமி கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கும்.இதற்கான பூஜைகள் முன்தினம் இருந்தே மலையில் துவங்கிவிடும்.. முதல்நாள் பரிசுத்த பூஜைகளும், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கும். தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும் நடக்கும். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கான சிறப்பு வழிபாடும், சங்கொலி பூஜைகளும் நடக்கும். மதியத்திற்கு மேல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வர். பக்தர்களுக்கு பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் அன்னதானம் வழங்குவர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தை அமாவாசை தர்ப்பணம்: தை அமாவாசையையொட்டி சிதம் பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் ஏராளமானோர் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவர். அமாவாசை நாட்களில் தாய், தந்தையரை இழந்தவர்கள், தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையர்களை நினைத்து விரதம் இருந்து, படையல் செய்து வழிபடுவது வழக்கம். தை மாத அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் ஒரு ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதால் அனைத்து நீர் நிலைகளிலும் தர்ப்பணம் செய்யப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்வர்.
திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு: திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் , தை அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறைவனை தரிசிக்க வருவார்கள். உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் தை அமாவாசை தினம் சிறப்பு நாளாகும். தை பட்ட சாகுபடியை துவக்குவதற்கு முன்பு விவசாயிகளை அமாவாசை தினத்தில் மாட்டு வண்டிகளுடன் வந்து மும்மூர்த்திகளை தரிசித்து விட்டு, சாகுபடி பணிகளை துவக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தை அமாவாசை தினத்திற்கு முதல்நாள் இரவே சுற்றுப்புற பகுதி விவசாயிகள், நூற்றுக்கணக்கான வண்டி மாடுகளில் ÷ திருமூர்த்தியில் குவியத் துவங்குவர் இதையொட்டி பலர் முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் திதி கொடுத்து வழிபாடு நடத்துவர். பக்தர்களின் வசதிக்காக, உடுமலையிலிருந்து திருமூர்த்தி மலைக்கு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பபடும்.
திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயிலில், தை அமாவாசை அன்னாபிஷேகம்.
திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயிலில், தை அமாவாசையன்று அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது இங்கு பதஞ்சலி மனோகரர், கிழக்கு நோக்கியும், அம்மன் மதுரபாஷினி தெற்கு நோக்கியும், அருள்பாலிக்கின்றனர். இக்கோயில்திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தஞ்சாவூர் ரோட்டில் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
இங்கு சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீபஜோதியாக தெரிவதை காணலாம். பொதுவாக சிவன் கோயில்களில் ஐ ப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வர். இங்கு எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. பித் ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் தை அமாவாசை யன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், இங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர். விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
அய்யாவாடி பிரத்யங்கிரா கோயிலில் மிளகாய் வற்றல் யாகம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்யங்கிரா கோயிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் யாகம் நடைபெறுகிறது. இதில் தைஅமாவாசையன்று இந்த யாக்த்தில் கலந்து கொள்பவர்களுக்கு எதிரி தொந்தரவுகள் இருக்காது. இது தவிர திருச்சி உறையூர் குங்குமவல்லி திருக்கோயிலில், அமாவாசை யாகம் சிறப்பாக நடக்கும்.இங்குள்ள இறைவன் சுயம்புவாக லிங்கத் திருமேனியராக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதராய் வாகனங்களில் எழுந்தருளியிருப்பது கோயிலின் தனி சிறப்பு.
ஒவ்வொரு அமாவாசை நாளிலும், தில்லைக்காளிக்கு சிறப்பு பூஜைகள், யாகம் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, தை அமாவாசை நாளில் காளியை வழிபட்டால் நம் முன் ஜென்ம வினைகள் யாவும் விலகிவிடும் என்பது ஐதீகம். அமாவாசை நாளில் தில்லைக் காளிக்கு 108 திரவியங்களால் அபிஷேகமும் விசேஷ யாகமும் நடைபெறும். தை அமாவாசை நாளில் இங்கு வந்து அவளிடம் முறையிட்டால் போதும்.... விரைவில் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து வைத்து அருள்வாள் தேவி என்கின்றனர் பெண்கள். யாகத்தில், அபூர்வ மூலிகைகளுடன் மிளகாய்வற்றலும் போடப்படுகிறது. இதில் கலந்து கொண்டு வேண்டிக்கொண்டால், எதிரிகள் தொல்லை ஒழியும் குடும்பத்தில் தம்பதிக்குள் ஒற்றுமை மேலோங்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். சகோதரச் சண்டைகள் யாவும் தீர்ந்துவிடும்; தீய சக்திகள் விலகி ஓடும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தாண்ட தானத்தில் தை வழிபாடு சிறப்பு: ராமநாதபுரத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 62 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது சகல தீர்த்தமுடையவர் கோயில் இங்கு அம்மன் பெரியநாயகி. இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தை மாதங்களில் வரும் அமாவாசைப் புனித நாளில், இந்தத் தலத்தில் திதி கொடுப்பது கூடுதல் பலனைத் தரும் என்பர். இந்தத் தலத்தில் திதி கொடுத்தால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம். அவர்களின் ஆத்மாவும் அமைதிபெறும். பிறகு சர்வதீர்த்தேஸ்வரரை வழிபட்டால். சகல ஞானமும் யோகமும் பெற்று இனிதே வாழலாம் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதரண்யம் கடற்கரையில் அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் வேதநாயகி.
இங்குள்ள தீர்த்தங்களில் ஒவ்வோராண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மாசி மாதத்தில் மகாளய அமாவாசை முதலிய நாட்களில் கோடியக்கரை ஆதிசேதுவிலும், வேதாரண்ய சன்னதிக் கடலிலும் அதன்பின்னர் மணிகர்ணிகையிலும் நீராடி மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் திருமணவரம், குழந்தைபாக்கியம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம், செல்வ செழிப்பு, பிணியற்ற வாழ்வு ஆகியன கிடைக்கும். இத்தலத்து திருமறைக்காடரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.