பதிவு செய்த நாள்
19
மார்
2013
10:03
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்: கோவை மருதமலை சுப்ரமணியசாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமரிசையாக நடந்தது. முருகனின் ஏழாம்படை வீடாக, பக்தர்களால் போற்றப்படுவது, கோவை, மருதமலை சுப்ரமணியசாமி கோவில். இங்கு, பெரும் பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில், கடந்த 14ம் தேதி, காலை 7.30 மணிக்கு, மங்கள இசை, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மறுநாள்(15ம்தேதி), காலை 7.00 மணிக்கு நவகிரக ஹோமம், மூர்த்தி ஹோமம்,சாந்திஹோமம் மற்றும் தீர்த்தசங்கரகணம் ஆகியவை நடந்தன. அன்று மாலை, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், அலங்காரம் செய்விக்கப்பட்டு, மூலாலயத்திலிருந்து கலசங்கள் யாகசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. மாலை 5.00 மணிக்கு, முதல்கால யாக பூஜை நடந்தது. 16ம் தேதி காலை 8.00 மணிக்கு, இரண்டாம் கால யாகவேள்வியும், மாலை மூன்றாம் காலவேள்வியும் நடந்தன.
நேற்று முன்தினம் 8.00 மணிக்கு, நான்காம் கால வேள்விகளும், மாலை ஐந்தாம் கால வேள்விகளும் நடத்தப்பட்டன. அன்று இரவு 10.00 மணிக்கு, மூலவருக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், சொர்ணபந்தம் சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, நேற்று காலை 4.00 மணிக்கு, 6ம் கால யாக வேள்விகளும், நாடிசந்தானம், தர்ஸஆகுதி, மகா பூர்ணாகுதியும் நடந்தது. தொடர்ந்து, காலை 5.00 மணிக்குமேல், தான்தோன்றி விநாயகர், இடும்பன், மயில்வாகனங்கள், சித்தர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 6.30 மணிக்கு, நாடி சந்தானமும், 7.00 மணிக்கு மகாபூர்ணாகுதியும் நடத்தப்பட்டு, கலசங்கள் யாகாலயத்திலிருந்து மூலாலயத்துக்கு பிரவேசம் செய்யப்பட்டன. சிவாகம முறைப்படி, காலை 9.35 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. அப்போது கோபுரத்தின் கீழேயும், கோவிலைச்சுற்றியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று, "மருதமலை முருகனுக்கு அரோகரா என்று கோஷம் முழங்க, பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். தொடர்ந்து, 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் முடிந்தவுடன், மூலவருக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, சாரை, சாரையாக மலையேறிய பக்தர்கள், முதலில் ராஜகோபுரத்தை தரிசித்து விட்டு, ஆதிமூலஸ்தானம், முருகன் சன்னதிக்கு சென்று சுப்ரமணியரை தரிசித்தனர். கும்பாபிஷேக விழாவில், பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாசல அடிகள், உள்ளாட்சி நிர்வாகிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.