பதிவு செய்த நாள்
03
ஏப்
2013
10:04
திருக்கழுக்குன்றம்: ஆனூரில், பாழடைந்த நிலையில் உள்ள, வேதநாராயண பெருமாள் கோவிலை புதுப்பித்து, பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள்கோரி உள்ளனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனூர் ஊராட்சியில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, வேதநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அடையாளம் இடப்பட்டுள்ள மூன்று கல்வெட்டுக்களில் இருந்து, கோவில் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.
முதலாம் ராஜராஜன்: இக்கோவில், கி.பி. 979ம் ஆண்டு, பார்த்திவேந்திர மன்னனால் எடுப்பிக்கப்பட்டுள்ளது. கி.பி.999ல், முதலாம் ராஜராஜனால் பல வழிபாடுகளுக்கும், இசை முழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இம்மன்னன், இவ்வூரில், தினசரி நால்வருக்கு வேதம் போதித்த வைணவருக்கு, பட்டவிருத்தியாக நிலமளித்துள்ளான் என, கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வருகிறது.கி.பி.1006ல், உச்சிகால பூஜை நடத்துவதற்காக, நிலம் தேவதானமளிக்கப்பட்டுள்ளது. அந்நாளில், சத்யாஸ்குலகால சதுர்வேதிமங்கலம் என்றழைக்கப்பட்ட இவ்வூரில், சித்திரமேழி விண்ணகர் கோவில், பெரிய நாட்டார் தானத்தால் கட்டப்பட்டது என, கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.
பராமரிப்பு இல்லை: வரலாற்று பிரசித்தி பெற்ற இக்கோவில், கடந்த 1970ம் ஆண்டில் இருந்து, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அப்பகுதியின் பிரதான ஆன்மிக தலமாக விளங்கும் இக்கோவிலை, அறநிலையத்துறை அதிகாரிகள் சரிவர பராமரிக்காததால், தற்போது, பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.இதுகுறித்து, பக்தர்கள் சிலர் கூறுகையில்,"வரலாற்று சிறப்பு மிக்க இத்தலத்திற்கு, பல்வேறு மன்னர்கள் தானம் அளித்து, வழிபட்டுள்ளனர். "ஆனால், பராமரிப்பில்லாத காரணத்தால், கோவில் மிகவும் சிதிலமடைந்துள்ளது. பெரும்பாலான நேரங்களில் கோவில் பூட்டியே கிடப்பதால், விசேஷ நாட்களில் கூட வழிபாடு நடப்பதில்லை. எனவே, கோவிலை புதுப்பித்து, பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் கண்ணபிரான் (பொறுப்பு) கூறுகையில்,""கோவிலில் தினசரி வழிபாடு நடைபெறாதது குறித்து விசாரிக்கப்படும். புனரமைப்பு பணிகள் @மற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.