பதிவு செய்த நாள்
03
ஏப்
2013
10:04
விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில் செல்லும் பக்தர்களுக்கு, தாணிப்பாறையில் அடிப்படை வசதிகள் செய்து தர, கலெக்டர் ஹரிஹரன் நடவடிக்கை எடுத்துள்ளார். மதுரை மாவட்டத்தின் எல்லையில் சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக் கோயிலுக்கு செல்ல, ஏழு கி.மீ., கடுமையான மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். தமிழகம் முழுவதும் இருந்து அமாவாசை, பவுர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மலைக்கோயிலுக்கு செல்ல மூன்று பாதைகள் இருந்தாலும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, தாணிப்பாறை வழி பக்தர்கள் செல்ல எளிமையாக உள்ளது. அதிகளவு பக்தர்கள் இந்த வழியாக சென்று வருகின்றனர். இங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. ஆடி அமாவாசை விழாவின் போது மட்டும், மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியம் சார்பில் குடி நீர், சுகாõதார வசதி செய்து தரப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். வசதிகள் செய்து தரக்கோரி பல அமைப்புகள், கலெக்டரிடம் முறையிட்டுள்ளர். இதைதொடர்ந்து, தாணிப்பாறை பகுதியில் ஆய்வு செய்த கலெக்டர் ஹரிஹரன், பக்தர்களுக்கு குடி நீர் வசதி, கழிப்பறை, மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க திட்டமதிப்பீடு தயார் செய்து, உடனடியாக பணிகளை செய்ய, வத்திராயிருப்பு ஒன்றிய பொறியாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் சுந்தர மகாலிங்கம் கோயில் செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அயன் நத்தம் பட்டியில், எம்.பி., தொகுதி வளர்ச்சி திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் பள்ளி வகுப்பறை பணிகளை ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் பிரபாகர், செயற்பொறியாளர் சேதுராமன், பி.ஆர்.ஓ., செல்வராஜ், வத்திராயிருப்பு பி.டி.ஓ.,க்கள் சுப்புராமன், வான்மதி, உதவிப்பொறியாளர் கீதா உட்பட அதிகாரிகள் உடன் சென்றனர்.