பதிவு செய்த நாள்
21
மே
2013
05:05
கடவுள் என்பதை சமஸ்கிருதத்தில் சுவாமி என்பர். விநாயகர், சிவன், விஷ்ணு என எல்லா கடவுளரையும் பொதுவாக சுவாமி என குறிப்பிட்டாலும் சமஸ்கிருதத்தில் இச்சொல் சுப்பிரமணியரை மட்டுமே குறிக்கிறது. அமரகோசம் என்னும் புகழ்பெற்ற சமஸ்கிருத அகராதியில் இதற்கான சான்று உள்ளது. அமர கோசம் என்றால் அழிவில்லாத பொக்கிஷம் என்பது பொருள்.
முருகனுக்கு பெருமாள் பெயர்: அருணகிரிநாதர் முருகனை பெருமாள் என்று குறிப்பிடுகிறார். அவர் எழுதிய திருப்புகழ் நூலில், ஒவ்வொரு பாடலின் கடைசி வரியிலும், பெருமாளே என்ற சொல் இடம்பெறும். பெருமாள் என்பது திருமாலைக் குறிக்கும் சொல்லாகவே இன்று வரை இருந்து வருகிறது. முருகனை தமிழக மக்கள் திருமாலின் மருமகன் என்பதால் மால்மருகன் என்று அழைப்பர். முருகனை மணந்த இந்திரனின் மகள் தெய்வானை, நம்பிராஜன் மகள் வள்ளி இருவரும் திருமாலின் மகள்களாக முற்பிறவியில் அமுதவல்லி, சுந்தரவல்லியாக வளர்ந்தனர். பின்னரே முருகனை மணக்கும் பேறு பெற்றனர். சிவ, விஷ்ணு இருவருக்கும் பாலமாக சிவபாலனாகவும், மால் மருகனாகவும் முருகன் விளங்குகிறார்.
அப்பாவின் விருப்பம்: வரம் பெற்ற சூரபத்மனை என்னால் கொல்ல முடியாது. என்னைக் காட்டிலும் வலிமை மிக்க ஒருவன் வரவேண்டும் என்று சிவனே முருகனை படைத்தார். அவன் தன்னை விட ஞானம் மிக்கவன் என்பதை உலகிற்கு உணர்த்த, மகனிடமே உபதேசம் பெற்றுக் கொண்டார். எதிலும் தான் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவன் கூட, தன் பிள்ளை தன்னை விட முன்னேறி, தன்னையே தோற்கடிக்க வேண்டும் என்று விரும்புவான். இதனை புத்ராத் இத்தேச்பராஜயம் என்று சமஸ்கிருதத்தில் குறிப்பிடுவர். பரம்பொருளான சிவனும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தன்னை விட தன் பிள்ளைகள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்க விரும்பினார். ஒருவர் யானை பலத்துடன் விளங்கினார். இன்னொருவர் வேல் எறிந்தால், அது மலையையே பிளக்கும் சக்தியைப் பெற்றிருந்தார்.
எளியவர்களின் தெய்வம்: தமிழகத்தில் முருகபக்தர்கள் மிக அதிகம். முருகனுக்கும் முத்தமிழுக்கும் நெருக்கம் அதிகம். வைதாலும் அருள்புரிபவர் என்று அவரைக் குறிப்பிடுவர். தாயைப் போல பிள்ளை என்பது போல, தன் அன்னை பார்வதியைப் போல முருகனும் அழகு வடிவாகவும், அருள் (கருணை) வடிவாகவும் திகழ்கிறார். அவர் எல்லாருக்கும் அருள்பவர் என்ற பொருளில், தீன சரண்யன் என்று குறிப்பிடுவர். எளிய மக்களின் புகலிடமாக இருப்பவர் அவர். அதனால், மலை, காடு, நதி என்று எல்லா இடங்களிலும் முருகன் கோயிலை அமைத்து வழிபடுகின்றனர்.
முருகனுக்கு சமமானது எது?
முருகனுக்கு வேல் தான் அடையாளம். எல்லா தெய்வங்களும் ஆயுதம் ஏந்தி இருந்தாலும், வேலுக்கு தனிச்சிறப்புண்டு. முருகனே தேவசேனாபதியாக பன்னிரண்டு கைகளில் பல ஆயுதங்களை வைத்திருந்தாலும் வேல் மட்டும் அவருக்கு சமமானதாகக் கருதப்படுகிறது. அதற்கு சக்தி ஆயுதம் என்று பெயர். தமிழில் சக்திவேல் என்று குறிப்பிடுவர். இதனை தனியாக வைத்து வழிபடும் வழக்கமும் உண்டு. முருகனின் வேலின் பெயரால் வேலாயுதம் என்று குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவர்.
பாம்பு கனவுக்கு தீர்வு: ஆந்திரா, கர்நாடகா பகுதியில் முருகனுக்கு மனிதவடிவில் சிலை அமைப்பதில்லை. நாகப்பாம்பின் வடிவமாக கருவறையில் எழுந்தருளச் செய்வர். சஷ்டி திதியன்று முருகன்கோயில்களில் நாகராஜா பூஜை நடத்துவர். கனவில் பாம்பு தோன்றினால், அதற்குப் பரிகாரமாக சுப்பிரமண்ய ப்ரீதி என்னும் பெயரில் புற்றுக்கு பால் விடும் வழக்கமும் உண்டு. பாம்பைக் கண்டால் ஸுப்பராயுடு என்று முருகனின் பெயரால் குறிப்பிடுவர்.
தமிழ்க்குழந்தை: சீர்காழியில் பிறந்தவர் திருஞானசம்பந்தர். இவரை முருகனின் அவதாரமாகக் கூறுவர். தந்தையுடன் சென்ற சிறுகுழந்தையான சம்பந்தர், குளக்கரையில் பசியால் அழுதார். அவரது அழுகையைப் பொறுக்காமல் அம்மையப்பர் காளை வாகனத்தில் எழுந்தருளினர். அம்பிகையும் ஞானசம்பந்தரின் பசி நீங்க பாலூட்டினாள். இறையருளால் தோடுடைய செவியன் என்று தேவாரத்தைப் பாடத் தொடங்கினார். ஆதிசங்கரரும் சவுந்தர்யலஹரியில் சம்பந்தரைப் பற்றி பாடியுள்ளார். பர்வதராஜனின் மகளான பார்வதிதாயே! திராவிட சிசுவிற்கு (தமிழ்க் குழந்தையான ஞானசம்பந்தருக்கு) பாலை வழங்கினாய். அதன் சிறப்பால் அக்குழந்தை பாடும் திறன் பெற்று எல்லோரையும் கவர்ந்தது, என்று குறிப்பிடுகிறார்.
அன்புக்கு அம்மா! அறிவுக்கு அப்பா!
உஷ்ணம், குளிர்ச்சி ஆகிய இரண்டுமே முருகனிடம் உண்டு. அறிவில் (ஞானம்) அக்னியைப் போல உயர்ந்து நிற்கும் முருகன், கருணையில் நீரைப் போல குளிர்ந்தவராகத் திகழ்கிறார். இதற்கு காரணம், அவர் நெருப்பில் (சிவனின் நெற்றிக்கண்) பிறந்து தண்ணீரில் (சரவணப்பொய்கை) வளர்ந்தவர். நெருப்பைத் தாழ்த்திப் பிடித்தாலும் உயர்ந்து மேல் நோக்கியே எரியும். அதுபோல, அறிவார்ந்த ஞானபண்டிதனாக, அவர் மலை உச்சிகளில் உயர்ந்து நிற்கிறார். தண்ணீர் பள்ளத்தை நோக்கி ஓடி வருவது போல, கருணைப் பிரவாகமாக அடியவர்களுக்கு அருளை வாரி வழங்குகிறார். இந்த இரு பண்புகளும் அவரது பெற்றோரிடம் இருந்து வந்தவையே. சிவனிடமிருந்து அறிவும், அம்பிகையிடம் இருந்து கருணையும் அவரை அடைந்தது.