பதிவு செய்த நாள்
23
மே
2013
10:05
பரங்கிப்பேட்டை: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில், அரவாணிகள் தாலிக்கட்டி, நேர்த்திக்கடனை செலுத்தினர். கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் திருவிழா, கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவாக, அரவாணிகள் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதனையொட்டி மும்பை, குஜராத், டில்லி உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான அரவாணிகள் வந்து குவிந்தனர். இரவு, 10:00 மணிக்கு, கூத்தாண்டவர் கோவில் முன், அரவாணிகளுக்கு கோவில் பூசாரி ராமதாஸ் தாலிக்கட்டினார். தொடர்ந்து அரவாணிகள் கோவில் வளாகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நேற்று திருத்தேர் உற்சவமும், மாலை, 5:00 மணிக்கு, 64 அங்க லட்சணம் பொருந்திய அரவான் களப்பலி நிகழ்ச்சியும் நடந்தது.