பதிவு செய்த நாள்
24
மே
2013
10:05
அரூர்: மழை வேண்டி, வீடுகளை பூட்டி விட்டு, கிராம மக்கள், வனவாசம் சென்றனர். தர்மபுரி மாவட்டத்தில், கடுமையான வறட்சி நிலவுகிறது. விவசாய பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன; குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கடும் வறட்சி நிலவும் காலங்களில், கிராம பகுதி மக்கள், தங்கள் வீடுகளை பூட்டி விட்டு, அருகே உள்ள ஏரி அல்லது வனப்பகுதிக்கு செல்வது உண்டு.இது போன்று செல்வதால், ஊரில் பஞ்சம் போக்க, பலத்த மழை பெய்யும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. அரூர் அடுத்த மொரப்பூர் அடுத்த ஜாடையாம்பட்டி கிராமத்தில், 300 குடும்பத்தினர் வாசிக்கின்றனர்; வறட்சியால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதை அடுத்து, மழை வேண்டி, வனவாசம் செல்ல கிராம மக்கள் முடிவு செய்தனர். நேற்று காலை, 7:00 மணி அளவில், கிராமத்தில் உள்ள அனைவரும், வீடுகளை பூட்டி விட்டு, ஊருக்கு வெளியே ஏரிக்கரையில் திரண்டனர்.அங்கு, மாரியம்மன், பெருமாள் சாமி, வேடியப்பன் சாமிகளை, மழை வேண்டி வழிபட்டனர். பின்னர், மொத்தமாக சமைத்து சாப்பிட்டனர்; மாலையில் வீடு திரும்பினர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், "கடந்த, 15 ஆண்டுக்கு முன், இதே போல் வறட்சி ஏற்பட்டது. அப்போது, வனவாசம் வந்தோம். அதன் பின் நல்ல மழை பெய்தது. அதே போல் இந்தாண்டும் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கையுள்ளது என்றனர்.