பதிவு செய்த நாள்
24
மே
2013
10:05
திருப்பதி: திருமலைக்கு வரும் பக்தர்கள், இனி, தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள வாடகை அறைகளை பெற, சிரமப்பட வேண்டாம். இதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படுகின்றன. திருமலையில், ஓய்வறை வழங்குதல் மற்றும் பாதுகாத்தல் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பக்தர்கள் வாடகை அறையை பெற, திரும்பக் கொடுக்க, பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இது குறித்து, ஆந்திர வங்கி அதிகாரிகள், தேவஸ்தான அறைகளை வழங்கும் அதிகாரிகளுடன், தேவஸ்தான செயல் இணை அதிகாரி, சீனிவாச ராஜு, நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: பக்தர்கள் வாடகை அறையைப் பெற, கைரேகை பதிவு அனுமதி ஓரிடத்திலும், அறை எண்ணைப் பெற, வேறு இடத்திலும், அறையின் சாவியை வாங்க மற்றொரு இடத்திலும் என, தற்போது அலைய வேண்டியுள்ளது. இதை தவிர்க்க, இந்த சேவைகள் அனைத்தும், ஒரே இடத்தில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், பக்தர்கள் வாடகை அறைக்காக, டிபாசிட் செய்த பணத்தை திரும்பப் பெற, எளிய வழிமுறை நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு, கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டது.அறைகளுக்கு இரும்புக் கதவுதிருமலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டைத் தடுக்க, வாடகை அறைகளுக்கு இரும்புக் கதவுகளை பொருத்தும் பணியை, தேவஸ்தானம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
சமீப காலமாக, திருமலையில் பக்தர்கள் தங்கும் வாடகை அறைகளின் பூட்டை உடைத்து, உள்ளே இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தை திருடுவது, அதிகமாகி வருகிறது. தேவஸ்தானம் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தும், திருட்டுகள் குறையவில்லை. எனவே, வாடகை அறைகளுக்கு, இரும்புக் கதவுகளை அமைக்க திட்டமிட்டு, அதற்காக, 2.5 கோடி ரூபாயையும், @தவஸ்தானம் ஒதுக்கியுள்ளது. திருமலையில், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கும், அஞ்சனாத்ரி காட்டேஜில், இந்த திட்டம் முதலில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, முதல் கட்ட பணியாக, 132 அறைகளில் இரும்புக் கதவுகளை பொருத்தியுள்ளனர். திருமலையில் உள்ள, 4,000 வாடகை அறைகளுக்கும், கூடிய விரைவில் இரும்பு கதவுகள் பொருத்தப்படும் என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.