புதுச்சேரி: கவர்னர் வீரேந்திர கட்டாரியா, மணக்குள விநாயகர் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். கவர்னராக, வீரேந்திர கட்டாரியா நேற்று முன்தினம் பதவியேற்றார். அவர், நேற்று தனது குடும்பத்தாருடன் ஆன்மிக தலங்களில் தரிசனம் செய்தார். காலை 10.30 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலுக்கு கவர்னர் சென்றார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மோகன்தாஸ், கோவில் நிர்வாக அதிகாரி கருணாகரன் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கவர்னர் சுவாமி தரிசனம் செய்து, பக்தர்கள் அமரும் இடத்தில் அமர்ந்து பிரசாதம் சாப்பிட்டார். பின், மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி ஆலயத்திற்கு வந்த கவர்னரை, பேராயர் அந்தோணி ஆனந்தராயர் சால்வை அணிவித்து வரவேற்றார். ஆலயத்தை முழுமையாக சுற்றிப் பார்த்த பிறகு, சிறப்பு பிரார்த்தனை செய்தார். முல்லா வீதியில் உள்ள தர்கா மற்றும் பள்ளிவாசலுக்கு சென்றார். வக்பு போர்டு செயலாளர் ஷர்புதீன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்து ஆகியோர் வரவேற்றனர். அங்கு நடந்த சிறப்பு தொழுகையில் கவர்னர் பங்கேற்றார்.