பதிவு செய்த நாள்
15
ஜூலை
2013
11:07
கும்பகோணம்: முத்தாச் செட்டி விநாயகர் திருக்கோவில் மகாகும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கும்பகோணம் நாணயக்காரத்தெருவில் எழுந்தருளிஅருள்பாலித்து வரும் முத்தாச்செட்டி விநாயகர் வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் தருபவர். குன்றக்குடி அடிகளார் இங்கு வந்து வழிபாடு செய்தபோது, குபேர முக்தா விநாயகர் என்ற சிறப்பு பெயரிட்டு, வழிபட்ட பெருமைக்குரிய விநாயகர் ஆகும். சிறப்புப் பெற்ற இத்தகைய விநாயகர் ஆலயம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதனால் தெருவாசிகளும், இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்களும் ஒன்று கூடி, அஸ்திவாரம் முதல், அர்த்த மண்டபம் வரை, கருங்கல் திருப்பணிகள் செய்து அழகிய சுதை வேலைப்பாடுகள் மற்றும் வண்ணங்கள் தீட்டி சிறப்புடன் செய்யப்பெற்றது. இத்தகைய சிறப்புப் பெற்ற இக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் நேற்று காலை, 10.15 மணிக்கு மேல், 11.30 மணிக்குள் நடந்தது. மகா தீபாரதனை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் அளிக்கப்பட்டது. கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மாலையில் மகா அபிஷேகமும், தொடர்ந்து தீபாரதனை மற்றும் திருவீதியுலா நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த, 11ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் விழா துவங்கியது. கடந்த, 12ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை வரை, 4 காலம் யாகசாலை பூஜை நடந்தது. யாகசாலை பூஜா காலங்களில் வேதபாராயணம், திருமுறை பாராயணம், இன்னிசை கச்சேரிகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை இளைஞர் நற்பணி மன்றத்தினர், விழாக்குழுவினர்கள் மற்றும்தெருவாசிகள் செய்திருந்தனர்.