பதிவு செய்த நாள்
15
ஜூலை
2013
11:07
ப.வேலூர்: நெட்டையாம்பாளையம் விநாயகர், பொன்காளியம்மன் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். ப.வேலூர் அடுத்த நெட்டையாம்பளையத்தில், விநாயகர், பொன்காளியம்மன், மதுரைவீரன் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவில் திருப்பணி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 10ம் தேதி இரவு, கிராம சாந்தியுடன் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று முன்தினம் காலை, காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடிய பக்தர்கள், யானை, குதிரை போன்ற வாகனங்களில், புனித நீர் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து, கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 8.30 மணிக்கு, விநாயகர், பொன்காளியம்மன், மதுரைவீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அதையடுத்து, ஸ்வாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, திருப்பணிக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.